வணக்கங்கள்....



என் எண்ண பட்டறையின்

எதிர் முன்னே நின்று

அதன் வண்ண பக்கத்தை

அசை போட போகும்

உங்களுக்கு.....

Friday, February 8, 2013

சதுரகிரி சாரல்

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான மலைகள் ஆன்மீகத்துடன் தொடர்பு கொண்டவை. 800 m க்கு மேல் உள்ள மலைகளுள் எவையெல்லாம் எறக்கூடியதோ, அவை அனைத்தும் தரக்கூடிய அனுபவம் மிக அருமையானது. ஆன்மிகம் அல்லாமல் கூட ஒவ்வொரு தனி மனிதனையும் பாதிக்க வல்லது என்பதை மட்டும் உறுதியாய் என்னால் சொல்லடியும். அதை முதன் முதலில் அனுபவித்தது வெள்ளிங்கிரி மலையில். உடம்பிற்கும் மனதிற்கும் பெரிய சவாலைத் தரும். ஒரு சில இடங்களில் மிக அழகான இயற்கை , மறுபக்கம் உடல் சோர்வு மற்றும் நேரம் இல்லாமை. இவை அனைத்தையும் சமாளிக்கும் திராணியும் அவையே கொடுத்து விடும்.அப்படி ஒரு மலை தான் சதுரகிரி. விளையாட்டாய் நண்பர்களுக்கும் இந்த பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று அவர்களை இந்த வலைக்குள் இழுத்தேன். மாட்டிக்கொண்டார்கள். கிளம்பிவிட்டோம்.


தொகுத்துக் கூற முடியாத அளவு அனுபவங்கள். நடந்து செல்லும் மலையின் அருகே இன்னொரு சிகரம். அந்த சிகரத்தின் வழுக்கான முகட்டில் முழைத்த காய்ந்த பதர்கள், அருவி ஓடிய பாதை இப்படி அழகோ அழகு. வெளிச்சம் குன்றிய இரவில், வானத்தைப்   பார்த்தால், ஒளிரும் நட்சத்திரங்கள் மிக அருகில். பின்னர், மிகுந்த குளிரில் மன்றாடிக்கொண்டிருந்த பொழுது ஒரு தேவதை தென்பட்டாள். ஆம், அப்பொழுது தான் குழித்துவிட்டு, தன நீண்ட கூந்தலை படர விட்டபடி கருப்பு சேலையுடன் வெளியே வந்தாள். ஆபாசமே இல்லாத அழகு. பெண்மையை இப்படியும் ரசித்தது இதுவே முதல் முறை. பிழைப்பிற்காக அங்கு வந்து கடை நடத்துகிறாள், தன் கணவனுடன். இரண்டாம் நாள் காலையில் தவசி பாறையை பார்க்க வேண்டும் என்று இன்னும் சற்று மேலே ஏறினோம். தவசி பாறையின் அடியில் ஒருவர் படுத்தே செல்லக்கூடிய அளவிற்கு ஒரு பெரிய துவாரம் இருக்கிறது. ஊர்ந்து சென்று பார்த்தால், உள்ளே ஒரு லிங்கமும், தியானம் செய்யக்  கூடிய அளவிற்கு இடமும் இருக்கிறது. முந்திரிக்கொட்டையாய் முதலில் சென்ற பொழுது, பயங்கர திகிலாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. எந்த எண்ணம் பழங்கால மனிதர்களை இப்படி ஒரு தனிமையை தேடிச் செல்ல வைத்தது என்று யோசிக்கையில், முற்காலங்களில் நிறைய தனிமை இருந்தது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. ஏறுகையிலும் இறங்கும் பொழுதும் எண்ணற்ற மனிதர்கள். ஏன் என் நண்பர்கள் கூட அங்கே சென்றவுடன் சற்று வேறு விதமாய்த் தான் தென்பட்டார்கள். அது அந்த இடத்தினாலோ அல்ல வேறு ஏதோ மாற்றத்தின் வித்தாய் கூட அமைந்திருக்கலாம். அவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் கூட இது நடந்திருக்கலாம். ஆனால், அந்த மாற்றத்தை மிக நெருக்கமாக உணர முடிந்தது. என்னுள் கூட அது எனக்கு முன்பாகவே நடந்தது. மற்றபடி, இன்னும் நிறைய ஆச்சரியங்கள் அந்த மலையில் உள்ளன.அவற்றை சொல்லத் தேவையில்லை. அனுபவமாகவே அது அமைய வேண்டுமே தவிர செய்தியாகி விடக்கூடாது.வருத்தம் என்னவென்றால், அதிக அளவிலான மக்கள் கூட்டம் என்னென்ன விழைவுகளை ஏற்படுத்துமோ, அது அங்கே பலித்து விட்டது. நீங்கள் ஏறிச்சென்று பார்க்க வேண்டும் என்று எழுதியிருந்தால், அந்த ரம்யம் பிம்பமாக மாறி உங்களுக்குள் ஊடுருவும் போது, கொஞ்சம் அமைதியாக கவனிக்க முற்படுங்கள். அந்த சதுரகிரி சாரல் உங்களையும் வருடட்டும்.
இப்படிக்கு,
விக்.

Followers